Tuesday, May 8, 2007

தமிழ்மணத்தில் 40-க்கு மேல் பின்னூட்டம் வாங்குவது எப்படி?

இந்த சூட்சுமத்துக்கு விடை தெரியாமலா இத்தனை நாள் முழித்தேன்? :-0

40 க்கு மேல பின்னூட்டம் வாங்கினா தமிழ்மணத்தில் சிறப்பு கவனிப்பு இருப்பதால் அப்படி வாங்குவதற்கான ரகசியத்தை இங்கே போட்டு உடைக்கிறேன். எல்லாருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையோடு!

ஒரு சின்ன கணக்கு. பயப்பட வேண்டாம். 2-ம் வகுப்பு படிச்சிருந்தா போதும். ;-))

x = உங்க தற்போதய வயசு

y = 40 - x

உதாரணமா உங்க வயசு 28-ஆக இருந்தா,

y = 40 - 28 = 12

அப்போ, 40-ஐ தொட 12 வருடங்கள் பொறுத்திருக்கனும்.

40 வயச தொட்டதுக்கப்புறம் வாங்கற பின்னூட்டங்களெல்லாம், 40 க்கு மேல் வாங்கறதுதானே?

ரொம்ப காலம் விஞ்ஞானியா இருந்து கண்டுபிடிச்ச சூத்திரம். எஞ்ஜாய் பண்ணுங்க தோழர்களே!

Sunday, May 6, 2007

கவிதைகளை பிழைக்கவிடு!

வைக்கோல் போரினூடே
சிதறிக் கிடக்கும்
நெற்மணி துளிகளை
கொத்தி கொத்திப்
பொறுக்கும் பசிதாக்கமுற்ற
பட்சியாய்
தெரிவான வார்த்தைகளை
தொடுத்து நையப்பட்ட
கவிதையில்
விரல் இடுக்கினிடையே
கொம்புத் தேன்
ரசமாய் உருகி
வழியும் என் காதல்.

படிக்க நீ மறுத்தும்
ஒவ்வொரு வரியும்
உனைப் படிக்கும் புத்தகமாய்
செவிகளை நீ மூடிக்கொண்டும்
ஒவ்வொரு சொல்லும்
உனை ஒலிக்கும் சாகரமாய்
கண்களால் நீ உதாசீனத்தாலும்
உன் பேரழகை பதிவிக்கும்
வர்ணஜால ஓவியமாய்
காதலை நீ மரணித்தாலும்
அது உயிர்வாழும் அரும்படைப்பாய்
என் கவிதைகள் சீவித்திருக்க,
உன் மௌனத்தைக் கலைத்து
இல்லையென்று சொல்லி
என் காதலைக்
கொல்வதை விட
ஒரு பேசா மடந்தையாய்
இருந்துவிட்டுப் போ.
என் கவிதைகளாவது
பிழைத்துப் போகட்டும்!

Thursday, May 3, 2007

கடற்கரை இதிகாசம்

அதீத நடைக்களைப்பில்
பயணிக்கும் பேரலைகள்
கரைகளை வருடி
நுரைகளை உமிழ
புதிதாய் பிறப்பெடுக்கும்
குமிழிகளோடு காதலும்.
விளிம்புகள் அஸ்தமித்து
வாயுக்கள் சங்கமிக்க
கண்ணாடிச் சுவர்களில்
பிரதிபலிக்கும் எல்லையில்லா
அந்திவானம் இணைந்த
இதயங்களின் எதிர்பார்ப்பு
மனமோ?
தன்னந்தனியே உலவி
யாரோடும் சேராது
சிலிர்த்துத் தெறிக்கும்
கண்ணாடி மொட்டுக்களின்
பிம்பங்களில் தொக்கி
வீணாகி நின்ற
பாழான காதல்கள்.
இப்படி அனுப்பொழுதும்
கடற்கரை கட்டும்
காதல் இதிகாசத்தில்
எல்லார் கதைகளும்
ஏதோவொரு பக்கத்தில்.
மேடு குழிகளுமாய்
திக்கற்று விரவிக்கிடக்கும்
மணல்பரப்பின் சுவடுகள்
காதல் நெஞ்சங்களின்
கனவுகளை சுமந்தபடி.
அலைகளின் முதுகை
வருடிவரும் காற்று
கரைதாண்டி மெல்ல
மௌனங்களை விற்றுச்
செல்ல ஸ்பரிசங்களில்
பிரவாகிக்கும் வார்த்தைமேல்
சுண்ணம் பூசி
சலசலக்கும் அலையோசைகள்.
இடைவெளி விட்டு
அமர்ந்தாலும் இதயங்களின்
அரவணைப்பை வெளிப்படுத்தும்
அர்த்தமில்லா மணல்கிறுக்கல்கள்.
தன்னிலை மறந்து
காதலர் சுயங்களை
உரசிப் பார்க்கும்
ஒவ்வொரு துளிப்பொழுதும்
எட்டிப் பார்க்கும்
சின்ன்ஞ்சிறு ஜென்துறவிகள்!

Tuesday, April 17, 2007

இயற்கை அன்பு - குறுங்கவிதை

அந்தி மாலையும் அழகுப் பூக்களும்
சிந்து துளிகளும் சீறும் மின்னலும்
வந்து ரசிக்க வளமான மலைகளும்
தந்து பிரமிப்பது இயற்கையன்பே!

Thursday, April 12, 2007

அம்மா

-----------------------------
மரணவலி கொடுத்த
மட்டற்ற மகிழ்ச்சி
"அம்மா" அந்தஸ்து;
------------------------------
இருட்டு அறைக்குள்
கண்மூடிய நர்த்தனம்
கருவறையில் குழந்தை;
------------------------------
சிசுவின் அலுப்பில்
ஒவ்வொரு உதையிலும்
பெருமையின் வெளிப்பாடு;
------------------------------
எண்ணைக் குளியல்
வெந்நீரின் கதகதப்பில்
அம்மாவின் அன்பு;
-----------------------------
வெண்ணிலவின் ஆக்கிரமிப்பில்
நிரம்பிப் போயிருக்கும்
குழந்தையின் வயிறு;
-----------------------------
ஒற்றை மொழியில்
சர்வதேச சமத்துவம்
குழந்தையின் அழுகை;
-----------------------------
தொலைக்காட்சியில் கிரிக்கெட்
வீரர் எடுக்கும் சதம்
ஓடியாடும் அம்மா;
-----------------------------
அயல்நாட்டு வேலை
டாலரில் சம்பளம்
அம்மா விழியோரம் கண்ணீர்;
-----------------------------
அம்மாவைத் திட்டியவள்
தண்டனை பெறுகிறாள்
மாமியாராக;
-----------------------------
நதி மூலத்திற்கு
திரும்பாத நதி
அம்மா கருவறை;
------------------------------

Monday, April 9, 2007

வேர்கள் நடத்தும் போர்கள்

("வார்ப்பு" சித்திரை 07 இதழில் வெளியான கவிதை)

சூழுகின்ற வெண்பனியையும்
தடவுகின்ற இளவெயிலையும்
தாங்கி நிற்கும் மரங்கள்
பச்சையிலைப் போர்வைகொண்டு...
வண்ண வண்ண மலர்கள்
சிரித்துச் சிரித்துக் கையசைத்து
வாசல் நின்று வரவேற்கும்
வசந்தகாலத்தை!

வண்ணம் தோய்ந்த இலைகள்
கம்பளமாய் விரிந்திருக்க
கோபமுற்ற சருகுகளின்
நள்ளிரவு சரசரப்பில்
மீதமுள்ள எலும்புக்கூடே
தொடை நடுங்கி நிற்கும்
இலையுதிர் காலத்தில்!

கால சுழற்சி நடத்தும்
கைப்பந்து போட்டியிலே
வசந்தமும், இலையுதிரும்
எதிரெதிரே விளையாட
பற்று கொண்டு நோக்கினால்
மறைந்து நிற்கும் உண்மை
புலவாமல் போகலாம்...

காலம் செய்த போதனையின்
கைகளிலே சிக்காமல்
முறுக்கி நிற்கும் வேர்கள்
மண்ணுக்கு அடியிலே
உண்மையின் சுவடாக...

கன்ன மேட்டில் குழிவிழ
மொட்டுக்கள் சிரிப்பதும்
சுருண்டிருக்கும் இளந்தளிர்கள்
கைவிரிக்கத் துடிப்பதும்
தீர்க்கமாய் வீற்றிருக்கும்
வேர்களை உறிஞ்சித்தான்...

பாறைகளைப் பிளப்பதும்
மலைகளைக் குடைவதும்
வெறும் மாலை நேரப்
பொழுதுபோக்காய் இருக்க
ஊடுருவல் ஒன்று
சத்தமில்லாமல் நடக்கும்
வலியில்லாத துளைகளால்
வருத்தமில்லை பாறைகளுக்கு...

திட்டங்கள் வகுத்தும்
பயனில்லை யென்று
சோர்வுற்று போயிருக்கும்
கவலை தோய்ந்த நெஞ்சங்களே!
மண்ணென்ற மூடி போட்டு
வெற்றியெனும் சூத்திரத்தை
வேர்கள் வடிவிலே பாருங்கள்...

வெளியோட்டத்தை விட்டு
சற்றே விலகி நின்றால்
புலப்படும் அந்த வேர்கள்
நெப்போலியன்
தலைவணங்கிய கடவுளாக!

Sunday, April 8, 2007

நிறப் பிரிகை

காற்றில் வடிவங்களற்ற
சிகரெட் புகையாய்
கரைந்து போன
நிர்வாண மனமொன்று
வெளித்தோலின் நிறமதை
உதாசீனப் படுத்தியது
ஈட்டிக் கண்களும்
அம்பு விரல்களும்
குத்திக் கிழிக்காதவரை...

கேட்காமல் கிடைத்த
வரமாய் பார்த்தாள்
தாய் குழந்தையை.
சாபமாய் கிடைத்த
நிறமென்று பார்த்தது
அறிந்துணரா உலகம்...

வெள்ளைப்பால் தொட்ட
கறுப்புக் கடவுள்
சிந்தனைகள் இல்லை...
பூச்சியின் இறக்கையில்
கலந்த வண்ணங்கள்
விலக்கல்கள் இல்லை...
வெள்ளைப் படலத்தில்
கருவிழியின் மிதப்பு
வெறுப்புகள் இல்லை...
கருநீல வானத்துள்
வெண்ணிலாவின் பவனி
மறுப்புகள் இல்லை...
இல்லாதவற்றிக்கு எல்லாம்
சமுதாயம் வைத்ததொரு
அழுத்தமான முற்றுப்புள்ளி...

வானவெற்றிடத்தின் நிறம்?
வெள்ளை ஒளிக்கற்றையில்
விளிம்பு விளைவு?
கதிரவன் விடை
தெரியாமல் கண்விழிக்க
நிறம்பிரிக்கும் பட்டகமாய்
இமை இமைத்தது
ஒன்றுமில்லா சூழ்வெளி.
சாதியென்றும் மதமென்றும்
இனமென்றும் நிறமென்றும்
சமுதாயத்தை நிறம்நிறமாய்
கூறாக்கியது முப்பட்டகமான
ஒன்றுமில்லா மனமோ?

Saturday, April 7, 2007

மறையாத மகாத்மாக்கள்

தேசிய மகாத்மாக்கள்
சிரித்தபடி சிறை வைக்கப்பட்டார்கள்
காகிதங்களில்;

ரூபாயாக
டாலராக
ரூபிளாக
அந்தந்த நாட்டுத்
திறந்தவெளி
காகிதச் சிறைகளில்;

பணங்களின்
முகப்பில் பவனி
வருகிறார்கள்
மனித மனங்களில்
மறந்துவிட்டபடியால்;

மெலிதாய் உதிர்க்கிறார்கள்
புன்னகையை
செல்வந்தன் பெட்டியில்
சிறைப்பட்ட சோகமா
ஏழையின் வயிற்றை
நிரப்பிய மகிழ்ச்சியா
என்று புரிந்து
கொள்ள முடியாதபடி;

அவர் புன்னகை
ஏழையின் கைகளில்
ஜொலிக்க
அவன் ஒளிர்விடும்
சிரிப்பில் தெரியும்
இறைவன் இருப்பு;

கைவிட்டு கைமாறி
கசங்கி கிழிந்து
வாடிப் போயிருந்தும்
வாடாமல் மனிதர்களை
வாழ செய்து
மறைந்தும் மறக்காத
அவர் தியாகங்கள்;

கொள்கைக்கு எதிராய்
துவேஷக் கொடிகள்
பிடித்த பகைவர்
விரல்கள் ஐந்தும்
இப்போது தடவி
மகிழ்கின்றன
அவர் முகப்பை;

"மகாத்மாக்கள் மறைவதில்லை"
பொதிந்து கிடக்கும்
உண்மைகள்
குலுங்கிச் சிரிக்கின்றன
எங்கோ பதுங்கி நின்று;

Friday, April 6, 2007

புதுக்கவிதை

மலைமீது பொழிந்த மழையால்
உருவெடுத்த காட்டாற்று வெள்ளமாக
மனதில் பெருக்கெடுக்கும் கற்பனைகள்!

சிந்தனை அணை நிரம்ப நிரம்ப
திறக்க பொறுத்திருக்கும் மதகுகளாக
விரல்கள் பிடித்திருக்கும் எழுதுகோல்!

விடுபட்ட தண்ணீரை
கொண்டு செல்லும் வடிகாலாக
எழுத்தாணி குத்திய வலிகளை
சத்தமிடாமல் தாங்கிக்கொள்ளும் காகிதம்!

சுழன்று, வளைந்து, ஆடித் தவழ்ந்து
அழகாய்ச் சென்று ஆறாய்
பிறப்பெடுக்கும் ஒரு "புதுக் கவிதை"!

இலக்கணம் என்ற சிமெண்ட்
கரைகள் இதற்கு இல்லை!
எதுகை, மோனை என்ற அலங்கார
படிக்கட்டுகளும் இதற்கு இல்லை!


இன்பமாய் போகும்!
தோன்றினபடி போகும்!
இயற்கையோடு இயற்கையாய் எல்லா
இதயங்களையும் கொள்ளை கொள்ளும்!

இந்தப் புதுநதியின் தண்ணீரை
நீங்களும் கொஞ்சம் பருகிச் செல்லுங்கள்!

Tuesday, April 3, 2007

கனவுக் கொட்டகை

("திண்ணை" யில் மார்ச் 29, 2007ல் வெளிவந்த கவிதை)

ஆதவன் கண்ணயர்வில்
படரத் துடிக்கும்
மாலைப் பொழுது.

பறவைகளின் கீச்சுக்கள்
ஓய்ந்தப் பின்
சிறகைவிரிக்கும் இரவுகள்.

கனவுக் கொட்டகையின்
மெல்ல மேலே
உயரும் தங்கத்திரை.

திரையில் தோன்றும்
நாயகனாக நான்
காசேதும் வாங்காமல்.

சொந்த நடிப்பை
மனதார ரசிப்பேன்
காசேதும் கொடுக்காமல்.

நாட்டியம் ஆடும்
நடன மங்கையாக
கண்மூடிய கருவிழிகள்.

பாட்டுப் பாடும்
குயில் பாடகியாக
இறுக்கமான உதடுகள்.

பகல்கள் சேர்த்த
நிராசைகள் அரங்கேறும்
இன்பமாய் இரவினிலே.

உதறிய காதலியோடு
காவியம் பாடலாம்
ஒன்றாகக் கைகோர்த்து.

சண்டையிட்ட எதிரியோடு
இலக்கியம் பேசலாம்
சாவகாசமாக மரத்தடியில்.

பிறக்காத குழந்தையோடு
மணல்வீடு கட்டி
இடிக்கலாம் கடற்கரையில்.

சுருள்சுருளான தொடரினூடே
இடைவேளை போடவரும்
காலைக் கதிரவன்.

தூக்கம் கலைந்தபின்
ஏங்கித் தவிப்பேன்
நிசமில்லாத நிழலுக்காக.

இல்லையேல்,

நிராசை மூட்டையை
நெஞ்சினிலே தூக்கிச்
சுமக்க வலுவேது?

Monday, March 26, 2007

சுடரின் மௌனம்

("திண்ணை"யில் மார்ச் 22, 2007 அன்று பிரசுரிக்கப்பட்ட கவிதை)

இறைவன் என்றொரு தச்சன்
இரவெல்லாம் கண்விழித்து
இழைத்து இழைத்து
செதுக்கிய வீணையொன்று
செவிடன் கையிலே சிறைப்பட,
மௌனமாய் அழுது நிற்கும்
கம்பியிழையின் விசும்பல்கள்
எவர் காதினிலும் விழுவதில்லை!

காதலிக்கும் போது
காமதேனுவாய் ஜொலிப்பதும்
கல்யாணத்துக்குப் பின்
அடிமாடாய் போவதும்
மூன்று முடிச்சு கயிற்றுக்கும்
மூக்கணாங்கயிறுக்கும்
வித்தியாசம் அறியாதவன்
வண்டியை ஓட்டும்போது!

யாக சோதியை முன்வைத்து
ஓதிய வேத மந்திரங்கள்
காயப்பட்ட போது
தூர நின்று வேடிக்கை பார்க்க,
கல்யாணத்திற்கு சாட்சியாக
நின்ற கடவுள்கூட
பதிலேதும் சொல்லாமல்
ஊமையாகிப் போனான்!

முன்னொரு பொழுதில்
உன்னை இசை பாடிய
அதே உதடுகள் இன்று
ஓயாமல் வசை பாடினாலும்
மெழுகுவர்த்தியாய்
நீ எரிந்து கொண்டிருப்பது
விசிறிக்கடியில் வீடே
சுகமாக உறங்கத்தானென்று
யாருக்கும் புரியவில்லை!

படிப்பு, வேலை,
நண்பர்கள், உறவுகள்
பெற்றோர், எண்ணங்கள்
என வரம்பில்லாமல்
தியாகம் செய்துவிட்டு
கனவுகளோடு நுழைந்தாய்
புகுந்த வீட்டின் தீபம் எரிய...
இலவம் பஞ்சான
உன் நெஞ்சினிலே
பற்றிய நெருப்பை
அணைக்க யாருமில்லை!

பெண்ணே...
உன் விழியோரம்
திரண்டோடக் காத்திருக்கும்
உருண்டைத் துளியில்
உப்பாகக் கரைந்திருக்கும்
சோகங்கள்
நிலவின் வழி
கைநீட்டும்
கருமேகங்களாக...
ஏங்கிக் தவிக்கும்
இருட்டுக்கள்
உன் ஒளிக்காக...
கரம் பட்டு
துவண்டு எழுவோம்
என்ற நம்பிக்கையோடு!


(செய்தி: பெண்களை அடிப்பதில் முன்னணி மாநிலங்களில் தமிழகமும் ஒன்று.)


http://www.thinnai.com/?module=displaystory&story_id=30703223&format=html

Thursday, March 22, 2007

வசந்தத்தின் திறப்பு விழா

(மிச்சிகன் தமிழ்சங்கத்தின் 'கதம்பம்' இதழில் பிரசுரமாகவுள்ள கவிதை)

வர்ணம் பூசி காதலுக்கு
வாழ்த்துச் சொன்ன
பூக்களெல்லாம்
சிரித்துக் கொண்டே
மரித்துப் போக
கையசைத்து வரவேற்ற
தோட்டமரக் கிளைகளெல்லாம்
பழனி மலை பக்தன் போல
மொட்டையாய் வீற்றிருக்கும்...

பிரிதலின் துக்கத்தை
எச்சிலாய் விழுங்கிவிட்டு
மௌனமாய் பார்த்திருக்கும்
மொட்டை மரங்கள்
தன் மேனி தொட்டு
பறவைகள் கொஞ்சும்
நாட்களை நோக்கி
காலியாய் காத்திருக்கும்...

மருமகளின் வீட்டிற்கு
கோபமாய் வந்திறங்கி
நடுக்கம் கொடுக்கும்
மாமியார் போல
கடுங்குளிரின் ஆட்சியிலே
மிச்சிகனின் சுதந்திரம்
மொத்தமாய் பறிபோகும்...

ஊரையே மூடியிருக்கும்
ஒற்றை போர்வையொன்று
வெள்ளியாய் மின்ன
நெய்தவன் யாரென்று
கேட்கத்தான் ஆளில்லை...

மாதங்கள் ஓடியபின்
காலத்தின் கதவுகளில்
மெதுவாய் ஒலிக்கும்
வசந்தத்தின் தட்டல்கள்...
கார்மேகத்தின் கைப்பிடியிலிருந்து
மெல்ல நழுவும்
நிலவு போலே
ஆதவனின் அரவணைப்பில்
வெட்கமாய் உருகியோடும்
பனித்துகள்கள்...

வரவேற்பு கீதமாய்
வாசலெங்கும் ஒலிக்கும்
பறவைகளின் இசைகள்...
வழியெங்கும் மலர் தூவி
கரத்தினிலே பச்சைக்கொடி
ஏந்தி நிற்கும் மரங்கள்...
பூக்களைக் காதலிக்க
மெல்லமாய் ரீங்காரம்
பாடும் வண்டுகள்...
பூங்கா திடல்களிலே
சத்தமிட்டு அங்குமிங்கும்
ஓடியாடும் பிள்ளைகள்...

மகிழ்ச்சி இசை
எங்கும் பரவ
மணிகளை அடித்து
வாழ்த்துகீதம் பாடிவரும்
வசந்தம் வருகிறது
அதோ! அதோ!
ஒன்றுகூடி வரவேற்போம்
இந்த மார்ச் மாதத்திலே!!

Wednesday, March 21, 2007

சொல் ஒரு சொல்

சொல்
ஒரு
சொல்

உன்னோடு
வரச்
சொல்

இல்லை
தூரப்
போகச்
சொல்

போதும்
உன்
விழிச்
சொல்

வேண்டும்
உன்
வாய்ச்
சொல்

சொல்லாமல்
தினமும்
சொல்லும்
சொல்லுக்கு
வாய்திறந்து
அர்த்தம்
சொல்

ஓவியனுக்கு
ஒரு
கைச்
சொல்

பாடகனுக்கு
ஒரு
குரல்
சொல்

ஞானிக்கு
ஒரு
அறிவுச்
சொல்

என்
சொல்
இதயச்
சொல்

சொல்
எனக்கு
ஒரு
பதில்
சொல்

முள்ளாக
தொண்டையில்
சிக்கின
வார்த்தையை
வெளியே
எடுத்துச்
சொல்

அது
என்
உயிர்ச்
சொல்

சொல்
நீ
ஒரு
சொல்

சொல்வதை
நான்
சொல்லிவிட்டு
நிற்கிறேன்
உன்
சொல்லுக்கு!

Friday, March 16, 2007

என்னை எனக்கு

("பதிவுகள்" ஏப்ரல் 2007 இதழில் வெளியானது)
யாசிக்கும் கைகள்
நீளும் போதெல்லாம்
சட்டைப் பையினை
விரல்கள் வருடி
உதட்டைப் பிதுக்கி
"பாவ்லா" செய்யும்...

அநீதியை ஒழிக்கத்
தலைவர் அவதாரம்
எடுக்கும் சினிமா
நுழைவுச் சீட்டினை
"பிளாக்"கில் வாங்கி
ரசித்துப் பார்க்கும்...

கட்டண கழிப்பிடத்தில்
காசுகளை செலுத்த
நிராகரித்து
"சிறுநீர் கழிக்காதீர்"
சுவற்றின் பரப்பில்
கூட்டத்தோடு நின்று
சிறுநீர் கழிக்கும்...

பிளாஸ்டிக் கோப்பையின்
தேநீர் சுவையில்
சற்றே இளைப்பாறி
காலியான கோப்பையை
இரயில்வண்டியின்
கம்பி சன்னலில்
தூக்கிப் போடும்...

சாலையில் தோய்ந்திருக்கும்
சிவப்புக்கறை நடுவிலே
அடிபட்டுக் கிடக்கும்
சக மனிதரை
கண்டும் காணாமல்
போகும்...

அபிமானங்களற்ற
துளிகளாலும்
அபிமானமுள்ள
துளிகளாலும்
நிரம்பி வழியும்
வாழ்க்கைக் கோப்பை...

கேடுகள் பரவியிருக்கும்
சுயநலப் பொழுதுகளில்
வாழ்வேன்
என்னை எனக்குப்
பிடிக்காமலே...

வெட்கப்படாமல்
விரவிக் கிடக்கும்
சமுதாயக் கேடுகள்...
நெய்யினை ஊற்றி
வேள்வித்தீயாய்
வளர்க்கும் அலட்சிய
அணுகல்கள்...

சமுதாய அநீதிகளை
தட்டி கேட்க
எனக்கு நானே
சூளுரைப்பேன்
எனக்கு என்னைப்
பிடித்திருந்தால்
போதுமென்று
அறியாமலே!

Friday, March 9, 2007

காலப் பிரவாகம்

("திண்ணை" இதழில் மார்ச் 08, 2007 அன்று பிரசுரிக்கப்பட்ட கவிதை)

பரிமாணமில்லாத
இருட்டுப் பிரதேசத்துக்குள்
வீர நடைபோடும்
கொலம்பஸ்களாக
கடிகாரங்கள்...
பிறப்புக்கும், இறப்புக்கும்
உள்ள இடைவெளியில்
இரயில்வண்டியாக
நம்மையும்
ஏற்றிச் செல்லும்...!

ஏ.சி. பெட்டியில்
இருந்தாலும்
ஓசி பெட்டியில்
இருந்தாலும்
ஊசிமுனை
அளவுகூட
வித்தியாசமில்லை...
சக பயணியர்க்கு
கண்ணீர் மல்க
கையசத்து விட்டு
ஏதோ ஒரு
நிறுத்தத்தில்
இறங்கும் போது
எல்லாருமே
ஒன்றுதான்...!

சைவமாயிருந்தாலும்
அசைவமாயிருந்தாலும்
மென்று அதை விழுங்கிச்
செல்லும் எல்லோருமே
அசைவப் பிரியர்கள்தான்...
விழுங்கினாலும் இல்லை
தூர நின்று புழுங்கினாலும்
ஒரு மலைப்பாம்பு போல
நம்மை
விழுங்காமல்
விடுவதில்லை...!

வெட்டியானும்,விஞ்ஞானியும்
ஏழையும்,பணக்காரனும்
அரசியல்வாதியும்,முனிவனும்
மற்றவரோடு ஒரே
கூண்டில் நின்று
ஏக்கத்துடன் கம்பி
வழியே பார்க்கும்
சமத்துவபுரச் சிறையாக
உலகம்...!

இருட்டுக்களைத் தின்று
வெளிச்சங்களும்
கோடைகளைத் தின்று
குளிர்களும்
ஒன்றைத் தின்று
இன்னொன்றாக
ஒரு ஃசிப்ட் தொழிலாளி
போலமாறி மாறி
பணி புரியும்...!

ஒரு நீரோடையாக
நிற்காமல் ஊர்ந்து
சென்றாலும்
ஒரு கூழாங்கல்லாய்
அங்கேயேதான்
அமர்ந்திருக்கும்...
காற்றைப் போல
புலப்படாமல்
இருந்தாலும்
உரசலின் சலசலப்பில்
தன் இருப்புகளைத்
தெரியப்படுத்தும்...!

விடியற்காலை ரசம்
பூசிய கண்ணாடிகள்
மௌனமாய்
வினவி நிற்கும்
முகச் சுருக்கங்களின்
கதைகளை...
சாயம் பூசிய
தலைமுடிகள்
கோடி பொய்கள்
சொன்னாலும்
வழித்த தாடையில்
துளிர்விடும்
ஓரிரு வெள்ளி தண்டுகள்
காட்டிக்
கொடுத்துவிடும்...!

கல்யாணப் பந்தியில்
கைநக்கி
விரல்கள் சூப்பி
வயிறு முட்ட
சாப்பிட்டுவிட்டு
வீசியெறிந்த
எச்சில் இலைகளாக
வரலாறுகள்...
குப்பைமேட்டுப்
பிராணிகளின் மீத
இலைப் போராட்டத்தில்
உணரப்படும்
வரலாறுகளின்
மகிமை...!

http://www.thinnai.com/?module=displaystory&story_id=30703083&format=html

Friday, March 2, 2007

நிலவு "டால்பின்"

(திண்ணை இதழில் மார்ச் 1, 2007 அன்று வெளியிடப்பட்ட கவிதை)

காலை முதல் மாலை வரை
புன்முருவல் பூத்த
லேலாண்ட் லாரியாக
அலுவலகத்திலே...
மாலை முதல் இரவு வரை
சக குடும்பத்தினர்க்கு
இலவச கால் டாக்சியாக
வீட்டினிலே...
அரிதாரமில்லாமல் அரங்கேறும்
தினசரிக் கூத்தில்
மீதமான சக்கைகளையும்
பிழிந்தெடுத்த கவலைகளையும்
யாரிடமும் திணிக்க
திரனில்லாமல்
ஊரே கண்மூடி உறங்கியபின்
சத்தமில்லாமல்
கதவுகளை திறந்து
மொட்டை மாடிக்குப் போய்
காயாத கருங்கடலில்
வெள்ளி மீன்களின் நடுவே
உலவிவந்து
வெள்ளை டால்பினாக
முற்றத்தின் உச்சியிலே
வழி மேல் விழி வைத்து
எனக்காக காத்திருந்த
அவளிடம்
பேசினேன் வாய்திறக்காமல்
கேட்டேன் சத்தமில்லாமல்
பார்த்தேன் விழி இமைக்காமல்
ஆழப் பரிவர்த்தனையால்
சம்பவித்த மனக்குளியலில்
அழுக்கினை கரைத்துவிட்டு
பாரமிழந்து திரும்ப வந்து
போர்வைக்குள்ளே
புகுந்துகொண்டேன்
நள்ளிரவுக் காதலியின்
நாளை வருகையை
ஆவலோடு எதிர்நோக்கி!

http://www.thinnai.com/?module=displaystory&story_id=30703012&format=html

Thursday, March 1, 2007

கவிஞன்

நான் ஒரு கவிஞன்
மின்மினிபூச்சி போல...
முடிவில்லாத
காலத் தொடர்ச்சியின்
ஒரு சில
அணுத்துளிகளில் மட்டும்...

மயிர்கூச்செறியும் இரவுகளினூடே
பரபரக்கும் பகல்களினூடே
கர்பரிக்கும் கருக்கல்களினூடே
பிரசவிக்கும் மழையினூடே
மொட்டை வெளிகளினூடே
முடி வெட்டாத காடுகளினூடெ
...................
இன்னும் எங்கெங்கோ
தேடி தேடியலைவேன்
கதவுகளுக்குப் பின்
ஒளிந்திருக்கும்
வார்த்தைகளுக்காக...

சுழன்றுவரும் நீரோட்டத்தில்
ஒரு மீன்கொத்தி போல...
கணங்கள் கழிந்துபோய்...
நாட்கள் கழிந்துபோய்...
வாயில் சிக்கிப்போன
ஓரிரு மீன்களும்
ஊசிப்போன
உயிரில்லாத
வெறும் சக்கை
வார்த்தைத் துகள்களாக...

க்ஷணநேர மோன தவங்கள்
இசைக்கும் இதயச் சுவர்களில்
உணர்வுகளின் ஆலாபனையை...
மோகனமாக, முகாரியாக,
இன்னும் அறியப்படாத
என்னென்னவோ ராகங்களில்...
பிரசவமாகும் வார்த்தைகள்
இதயக்குழந்தைகளாக...

வார்த்தைகளை விட
வெற்றிடத்தின் அர்த்தம் கூட...
சக மூச்சுகளுக்கிடையே
இடைபட்ட தெய்வீகமாக
உயிரினை சுமந்தபடி...
வெளிப்பார்வைக்கு காற்றாக
ஒன்றுமில்லாமல்...
கூர்ந்து ஊடே நோக்கின்
அணுத்துளிதோறும்
மறைந்திருக்கும்
உயிர்களின் பரவல்...

இன்றாவது...
என்றாவது...
சுவாசிக்குங்கால்
அந்த உயிர்கள்
உங்கள் இதயத்தின்
சமீபம் வந்து போகலாம்...

அந்த
ஒரு சில கணங்களில்...
மின்மினிப் பூச்சி போல
விட்டு விட்டு ஒளிரும்
நானும் ஒரு கவிஞன்...

Friday, February 23, 2007

கவிதை மரம்

("திண்ணையில் பிப் 22, 2007 அன்று வெளிவந்த கவிதை)

வாழ்க்கைப் பிரவாகத்தில்
சில நினைவுகள்
விதைகளாகக்கூடும்...
அவற்றில் ஒரு சில
பறவைகளின் எச்சமாக
இதயத் தோட்டத்தில்
சிதறி விழக்கூடும்...
பருவங்கள் மாறி
நிலத்தில்
ஈரம் கசியும் போது
சில விதைகள்
மண்ணைத் தாண்டி
முளை விடக்கூடும்...
அப்போது
அவற்றின் வேர்கள்
தோட்டத்து மண்ணுக்குள்
ஆழமாகப் பதியக்கூடும்...
தரைக்கு மேலே
துளிர்விட்ட செடி
சில நாட்களில்
கவிதையென்னும்
மரமாக உருவெடுக்கக்கூடும்...
வலிமையான அதன்
கற்பனை கிளைகள்
வார்த்தை
இலைகளை தாங்கியிருக்கக்கூடும்...
வெறும் இலைகளிலோ
அல்லது கிளைகளிலோ
அல்லது வேர்களிலோ
அந்த மரத்தின்
உயிர்ப்பு
இல்லாமல் போகக்கூடும்...
ஆனால்
ஒன்றுகூடி கைகோர்த்து
கம்பீரமான மரமாக
ஒருசேர நிறபதிலே
அதன்
அழகும், உயிர்ப்பும் இருக்கக்கூடும்...
அந்தக் கவிதை மரத்தின்
பூக்களும், கனிகளும்
உங்கள்
புலன்களுக்கு விருந்தாகக் கூடும்...
சில நேரங்களில்
அதலிருந்து வீசும் தென்றல்
இதயத்தினை
மென்மையாக வருடிவிடக் கூடும்...
அந்த வருடலில்
சில கணங்களாவது
உங்களை
நீங்கள் இழந்துவிடக்கூடும்...

http://www.thinnai.com/?module=displaystory&story_id=30702223&format=html

சாமியாரா போலாம்..ஆனா...

காதல் கவிதெ எழுதலாம்னா
மனைவிய யோசிக்க வேண்டியிருக்கு...
ஜாலி கவிதெ எழுலாம்னா
வயசை யோசிக்க வேண்டியிருக்கு...
சீரியஸ் கவிதெ எழுதலாம்னா
"தமிழ்மண" மக்கள யோசிக்க வேண்டியிருக்கு...
சரி
நம்ம "வெட்டிப் பயல' மாதிரி
சாமியாரா போலாம்னா
குழந்தைய யோசிக்க வேண்டியிருக்கு...
ஆபீஸல வேல வெட்டி நிறைய
இல்லீனா இந்த மாதிரி
கவிதெ எழுத வேண்டிருக்கு...

ஆனா
மரமில்லாமலே தோப்பாயிட்டிருக்கு
இல்ல
காலமாகியும் கன்னியாவே இருக்கு
என் "ப்ளாக் சைட்"!

ரொம்ப வருத்தமாயிருக்கு..ஹி..ஹி..ஹி...:-))

Thursday, February 22, 2007

தாகம்

அவனுக்கு வேட்கை
எடுத்த போதெல்லாம்
வரிசையாக நின்ற
அவைகளில்
"இன்னிக்கு இது வேணும்" என்று
சுட்டிக்காட்டி
அதன் நிறத்தில்
மனதைப் பறிகொடுத்து
பளிங்கு மேனியை அணைத்து
முரட்டுப்பிடியில்
அடக்கி வைத்த உணர்ச்சிகளை
காற்றாய் விடுவித்து
முழுதுமாக அனுபவித்து
வேட்கையை தணித்துக்
கொண்டபின்
பணத்தை கையில்
அள்ளி கொடுக்கையில்
"ரொம்ப நல்ல சரக்கு
நாளைக்கும் இதே குடுங்க"ன்னு
சொல்லிவிட்டு
நகர்ந்த போது
சக்தியெல்லாம் போய்
உணர்ச்சிகளில்லாமல்
காலியாய் நின்றிருந்த
அந்த
"குளிர்பான புட்டி".

Wednesday, February 21, 2007

இளமைக் கால நட்பு

(மார்ச் 2007-ல் "வார்ப்பு" இதழில் வெளியிடப்பட்ட கவிதை)

நீயும், நானும்
கரகமாடிய அந்த
ஒற்றை விளக்கு அரசமரத்தடி...
தோல் கிழிந்து இரவெல்லாம்
சிராய்ப்பு வலி கொடுத்த
நாய்க்கர் வீட்டு வேப்பமரம்...
மட்டைகளை தோளில் சுமந்து
மைல்கணக்கில் நடந்து போய்
கிரிக்கெட் ஆடிய
சொரசொரப்பு மைதானங்கள்...
எதிரியின் பம்பரங்களை
சில்லு சில்லாக உடைத்த
பிரேமா வீட்டு முன்வாசல்...
பசியெடுக்காத நிலாவுக்கு
கும்மி தட்டி சோறூட்டிய
தாவணி சிட்டுக்களை
காண அமர்ந்த திண்ணைகள்...
குமாரிடம் மூக்குடைபட்டு
இரத்தம் சிந்திய
நெருஞ்சி முட்புதர்...
இப்படி
ஒவ்வொன்றாய்
பதினைந்து ஆண்டுகளில்
எல்லாவற்றையும்
மிதித்தழித்த கால அரக்கன்...
மிஞ்சியிருப்பது
நினைவுகள் மட்டும்...
சுவடுகளாய்...

இயற்கையின் உயிரையெடுத்து
உயர்ந்தோங்கி நிற்கும்
செத்துபோன
கான்கிரீட் கட்டடங்கள்... ஊரெங்கும்...
தென்றல் போய்
தேங்கிவிட்ட கொசுக்களை
விரட்டும் "பேன் காற்றுக்கள்"...
நாகரீகப் போர்வையில்
என் கிராமமும் மாறி வருகிறது
இன்னொரு நகரமாக...

எங்கும்
ஓய்வில்லா மனிதர்களின்
தேடல்கள்...தேடல்கள்... தேடல்கள்...

என் தலை வெள்ளிக் கம்பிகளையும்
உன் தலை வழுக்கையையும்
தாண்டி நின்ற
நம் புன்சிரிப்புகளும்...தழுவல்களும்...
ஆயிரம் மைல்களுக்கப்பாலிருக்கும்
நம் உடம்புகள்...
அடுத்தடுத்த வீட்டில் குடியிருக்கும்
நம் இதயங்கள்...

நண்பா!
நிகழ்வுகளையெல்லாம்
ஜீரணித்து
பசிவெறியோடு சுற்றித் திரியும்
காலங்களை வென்று நிற்கும்
நம் "நட்பு"
அற்புதத்தில் அற்புதம்!

http://www.vaarppu.com/php/bodymaker.php?id=729&col=3

Monday, February 19, 2007

காவிரி போற்றுதும்...காவிரி போற்றுதும்...

("மார்ச் 2007, இதழ் 87 "பதிவுகள்" இதழில் வெளியான கவிதை)

காவிரி மங்கை
சேலை கிழித்து
மானபங்கபடுத்தப்பட்டாள்...
சோழர்
புலிக் கொடிகள்
பறந்த திசைதிக்கும்
எலிக்கறி தின்ற
சோகங்கள்...
காவிரி வற்றிய
போதெல்லாம்
கர்நாடகத் தமிழர்
தாங்கிக் கொண்ட
அடிகளும், வலிகளும்...
வழிந்தோடிய அவரின்
கண்ணீரில் மட்டும்
நாம் வருடங்கள்
பயிர் செய்திருக்கலாம்...
ஆனால்,
சாமான்ய தமிழா!
நீயோ சலனமற்று கிடக்கிறாய்...
உன் வீட்டு
மங்கையரின் உணர்வுகள்
தொலைகாட்சி சீரியலில்
பறி போய்க் கொண்டிருக்கிறது...
உன் வீட்டு ஆடவரின்
உணர்வுகள் கிரிக்கெட் தொடரில்
பறி போய்க் கொண்டிருக்கிறது...
பொறுத்திரு!
சுவாசிக்கும் காற்றை
எந்த திசையிலிருந்து பெறுகிறாய்?
நாளை அதையும்
யாராவது
உரிமை கோர
வரக்கூடும்...
அந்த வேளை
சினிமா கொட்டகையில்
தமிழறியா நடிகையின்
குத்தாட்டத்தில்
உன் உணர்வுகள்
பறி போகக்கூடும்...

வேங்கைத் தமிழர்..
அது வரலாறு...
என் பிள்ளை
கதை கேட்பான்
தூங்கும் நேரத்தில்!


http://www.geotamil.com/pathivukal/poems_march2007_yazini.htm

Friday, February 16, 2007

சுயநலம்

எழுதியவர்: யாழினி அத்தன்

நீ சுவாசித்த காற்று
நீ உண்ணிய உணவு
நீ பருகிய தண்ணீர்
நீ உடுத்திய உடை
நீ உறங்கிய இடம்
நீ பேசிய வார்த்தைகள்
.........................
இப்படி எதுவுமே
உன்னுடயதாய்
இருந்ததில்லை...

குருதியில் பிரதிபலிக்கும்
இயற்கைச் சூத்திரங்கள்...
கோடி செல்கள்
அனைத்திலும்
அதன் நிர்பந்தங்கள்..

அண்டயோனியின்
இயக்கத்தில்தான்
நீ எடுக்கும் ஓய்வு...

யாசகஞ்செய்து
நாட்களையோட்டும்
மனிதா...
நீ மட்டும்
எப்படி ஒரு
அதம சுயநலமியாக?

Thursday, February 15, 2007

புத்தன் என்றொரு சாமுராய்

எழுதியவர்: யாழினி அத்தன்

அறியாமை போர்வையின்
கறுப்புத் திரையை கிழித்தெறிய
புத்தன் ஏந்தியதோ
'வைர வாள்" மகாசூத்திரம்...

ஆயிரம் நெஞ்சங்களை
அது பிளந்திருந்தும்
ஆண்டுகளுக்கு முன்னிருந்த
அதே பளபளப்பு
இன்னும்
ஒரு சொட்டு கூடக் குறையாமல்...

இரக்கம் என்ற சொல்லுக்கு
அவன் அகராதியில் அர்த்தமில்லை...

ஒரு குழந்தையைப் போல
கைகட்டி
அவன் முன்னே நின்றாலும்
தப்பாமல் பாய்ச்சிடுவான்
வாளினை உன்
இதயச் சுவற்றினுள்ளே...

சந்தேகம் வேண்டாம்!
ஒரு இடியை காட்டிலும் பலமாக
ஒரு மின்னலை காட்டிலும் வேகமாக
இறங்கும் உனக்குள்ளே ஒரு சக்தி...
இதயம் இரண்டாக மனம் மருண்டோட
சத்தமில்லாமல்
நீயும் செத்துப் போவாய்!

ஆனால்....ஆனால்...பேரதிசயம்
ஒன்று உனக்காக காத்திருக்கும்...

எந்த கணம் சிறுமனிதனாய் இறப்பாயோ
அதே கணம் ஒரு ஞாநியாய் பிறப்பெடுப்பாய்...
எந்த கணம் உன் சிற்றிதயம் பிளக்கப்பட்டதோ
அதே கணம் ஒரு செந்தாமரையாய் மலரும்...
பயந்து ஓடிப்போன உன் குரங்கு மனம்
அருவியில் குளித்த அழகு மானாய் திரும்பும்...
கண்களில் சலித்துப்பெடுத்துப்போன
இந்த உலகம் ஒரு அபூர்வ மரமாய் சுடர்விடும்...
செவிகள் கேட்ட இரைச்சல் சத்தங்கலெல்லாம்
சங்கீதம் நிறைந்த சாகரங்களாகும்...
உழைத்து சளைத்துப்போன உன் தேகமோ
உணர்வுகள் செறிந்த ரோஜா மலராகும்....
பிருதுவில் ஒளிந்திருந்த கடவுளின் இரகசியத்தை
தெரிந்து அனுபவித்து இன்புறுவாய்!

வாழ்க்கையைப் புறக்கணித்து
வழிதேடச் சொன்ன
துறவிகள் நடுவினிலே
"வைர வாள்" கொண்டு
புதிதாய் பிறக்கச் செய்து
வாழ்க்கையை "முழுதாய்"
உணரச் சொன்ன
புத்தன் ஒரு மகா "சாமுராய்"!

சாமுராய் - போர் வீரன்

Wednesday, February 14, 2007

குழாயடி ஈர்ப்புகள்

எழுதியவர்: யாழினி அத்தன்

(இந்த கவிதை "கீற்று" இதழில் பிப் 18, 2007 அன்று பிரசுரிக்கப்பட்டது)

கவிதைகள் வர்ணித்த
உன் கொடியிடையில்
பிளாஸ்டிக் குடம்...
அது பெருமைப்பட்ட
என் வைரத் தோளில்
தகரக் குடம்...
தண்ணீர் சுமைகளைத் தூக்கிதான்
நம்
காதலுக்கு வித்திட்டோம்...
குழாயடியில் நாம் செய்துகொண்ட
பார்வை பரிமாற்றங்கள்...
என் மடத்தன சேட்டைகளுக்கு
நீ பரிசளித்த புன்முறுவல்கள்...
என
உரங்களைத் தின்று
வளர்ந்த நம் காதல் செடி...
..........................
இன்று...
காலப் பரிணாமத்தில் காணாமல்
போய்விட்ட அந்த குழாயடி...
ஒருவேளை நம் காதல்
பூவாகி, காயாகி, கனியாகி
விதைகளையீன்றிருக்கக்கூடும்...
ஆனால்
மண்ணோடு மண்ணாகி, மக்கி
என் மனத்தின் ஆழத்தில்
ஒரு நிலக்கரித் துண்டாக
பொதிந்து கிடக்கிறது...
புகையினை கக்கும்
எப்போதாவது...
அந்த கக்கலில் சில நேரம்
கவிதைகளும்
அடங்கிப்போயிருக்கும்...

http://www.keetru.com/literature/poems/ramesh.html

மெளன மொழிகள்

எழுதியவர்: யாழினி அத்தன்

நீ பேசும் மொழி என்னவென்று
எனக்குத் தெரியாது...
நான் பேசும் மொழியும்
உனக்குப் புரியாது...
ஒவ்வொரு முறை
நம் கண்கள்
சந்தித்த போதெல்லாம்
நம் இதயங்கள்
கலந்துரையாடின...
அருகில்
சுற்றித்திரிந்த அறிவு
எங்கோ சந்திடுக்கில்
ஒளிந்து கொண்டது...
என் முன்னே நீ
இல்லாத போதெல்லாம்
இதயம் அறிவிடம்
சிறைபட்டுக் கொண்டது...
இவையிரண்டும் நடத்திய
அந்த மெளனப் போர்
முடிவில்லாத
ஈரான் - ஈராக் போர்...
ஒருவேளை
இதயம் வென்றிருந்தால்
காதல் வென்று
நம் மொழிகள்
சங்கமித்திருக்க வேண்டும்...
இல்லையேல்
அறிவு வென்று
நான் உன்னை முழுதுமாக
மறந்து போயிருக்க வேண்டும்...
இரண்டும் நடக்கவில்லை..
.......................................
இப்போது
நீ எங்கோ... நான் எங்கோ...
காலம் மறக்கடித்த
அந்தப் போர்...
மறக்காமல் நினைவூட்டும்
அதன் தழும்புகள்...

கோவில் சன்னதி

("திண்ணை" யில் பிப். 15, 2007 அன்று பிரசுரிக்கப்பட்டது)

கோவிலுனுள் தெய்வம் இருந்தும்
வழிப்போக்கரை வணங்கும்
பிரகாரத்து யாசகர்கள்...
"அம்மா தாயே தர்மம் போடுங்கம்மா"
என்றதொரு கூர்வாள்
நெஞ்சினிலே நேராக பாய்ந்தாலும்
இதயத்தை சுற்றிய இரும்புக் கவசம்
இறுக்கமாய் பூட்டித்
தன்னைக் காத்துக் கொள்ளும்...
ஆயிரம் மிதியடிகளில்
அரும்பிய அழகிய வர்ணஜாலம்
அதில் ஒரு சொட்டு கலக்க
வெறும் ஐம்பது நாணயம்தான்...

தவிலும் நாதமும் கூடிக்
குடும்பம் நடத்துவது கோவிலுக்குள்தான்...
கடலலை இரைச்சலில்
அந்த தமிழிசை மங்கினாலும்
நின்ற இடம் மாறாத
தெய்வம் அந்த தேனிசையில்
மெய்மறந்து நிற்கும்...

தீபத்தின் சோதியில்
கலங்கரை விளக்கான
கடவுளது முகம்...
தீபாரதனை தட்டில்
சில்லரை கவலையில்
அர்ச்சகரின் முகம்....
புதிதாய் பூத்திருந்த ரோஜாக்கள்
காந்தமாய் கவர்ந்தது கண்களை...
ஒவ்வொரு ரோஜாவுக்கும்
முள்வேலி காவலாய்
புதுமாப்பிள்ளைகள்...
கூட்டுச் சிறையிலிர்ந்து விடுபட்ட
பட்டாம்பூச்சிகளாய்
சிற்கடித்து பறந்து
தன்னுலகம் மறந்த காதலர்கள்...
வீட்டினில் விளையாட
தூண்களில்லை யென்பதாலோ
மண்டப கால்களில்
மறைந்து விளையாடும்
சிறு பிள்ளைகள்...
கோடி பணம் இருந்தும்
இன்னும் கோடி கோரிக்கைகளுக்கு
எழுதாத விண்ணப்பமிடும்
பட்டுவேட்டி பணக்காரர்கள்...
விண்ணளவு குப்பைகளை
தாங்கிய கனவு லாரியாய்
ஏழை மனிதர்கள்...
அறிவுப் பசியில்
அலசி அலசி
குழம்பிப் போயிருக்கும் நான்...
ஆலயத்துள் தேங்கிய
சேற்றிலே சிந்தனை
காலை ஊன்றியபின்
இன்னும் அழுக்காகிப்போன
என் மனது...

சந்தைக்கடை நெருக்கத்தில்
கசங்கிப்போன நாயாய்
வெளியே வந்தேன்...
காலில்லாத அந்த
காவியுடை யாசகனின்
அழுக்காணி மனைவி
உடுப்பில்லாத பச்சிளம் பாலகனை
இடுப்பில் கொண்டு
ஒடுக்குப் பாத்திரத்தைக் குலுக்கி
"ஐயா தர்மம் பண்ணுங்கய்யா
ரெண்டு நாளா சாப்பிடலை"
என்று கரைந்தக் கால்
என் கண்களின் ஓரம்
தேங்கிய துளியில்
இதயத்தின் இரும்புக் கதவு
உருகும் மெழுகானது...
அறிவுக் கண்கள் விழிக்குமுன்
செய்த அந்த கணக்கில்லாத
தர்மத்தில் அவளின்
கண நேர மகிழ்ச்சி...
அதில் எனக்குக் கிடைத்த
கடலளவு நிம்மதி...

கண்டுகொண்டேன்...

மரத்திலே கிட்டாத பழம்
மரத்தின் கீழே!!

http://www.thinnai.com/?module=displaystory&story_id=30702152&format=html