Sunday, April 8, 2007

நிறப் பிரிகை

காற்றில் வடிவங்களற்ற
சிகரெட் புகையாய்
கரைந்து போன
நிர்வாண மனமொன்று
வெளித்தோலின் நிறமதை
உதாசீனப் படுத்தியது
ஈட்டிக் கண்களும்
அம்பு விரல்களும்
குத்திக் கிழிக்காதவரை...

கேட்காமல் கிடைத்த
வரமாய் பார்த்தாள்
தாய் குழந்தையை.
சாபமாய் கிடைத்த
நிறமென்று பார்த்தது
அறிந்துணரா உலகம்...

வெள்ளைப்பால் தொட்ட
கறுப்புக் கடவுள்
சிந்தனைகள் இல்லை...
பூச்சியின் இறக்கையில்
கலந்த வண்ணங்கள்
விலக்கல்கள் இல்லை...
வெள்ளைப் படலத்தில்
கருவிழியின் மிதப்பு
வெறுப்புகள் இல்லை...
கருநீல வானத்துள்
வெண்ணிலாவின் பவனி
மறுப்புகள் இல்லை...
இல்லாதவற்றிக்கு எல்லாம்
சமுதாயம் வைத்ததொரு
அழுத்தமான முற்றுப்புள்ளி...

வானவெற்றிடத்தின் நிறம்?
வெள்ளை ஒளிக்கற்றையில்
விளிம்பு விளைவு?
கதிரவன் விடை
தெரியாமல் கண்விழிக்க
நிறம்பிரிக்கும் பட்டகமாய்
இமை இமைத்தது
ஒன்றுமில்லா சூழ்வெளி.
சாதியென்றும் மதமென்றும்
இனமென்றும் நிறமென்றும்
சமுதாயத்தை நிறம்நிறமாய்
கூறாக்கியது முப்பட்டகமான
ஒன்றுமில்லா மனமோ?

0 comments: