Friday, April 6, 2007

புதுக்கவிதை

மலைமீது பொழிந்த மழையால்
உருவெடுத்த காட்டாற்று வெள்ளமாக
மனதில் பெருக்கெடுக்கும் கற்பனைகள்!

சிந்தனை அணை நிரம்ப நிரம்ப
திறக்க பொறுத்திருக்கும் மதகுகளாக
விரல்கள் பிடித்திருக்கும் எழுதுகோல்!

விடுபட்ட தண்ணீரை
கொண்டு செல்லும் வடிகாலாக
எழுத்தாணி குத்திய வலிகளை
சத்தமிடாமல் தாங்கிக்கொள்ளும் காகிதம்!

சுழன்று, வளைந்து, ஆடித் தவழ்ந்து
அழகாய்ச் சென்று ஆறாய்
பிறப்பெடுக்கும் ஒரு "புதுக் கவிதை"!

இலக்கணம் என்ற சிமெண்ட்
கரைகள் இதற்கு இல்லை!
எதுகை, மோனை என்ற அலங்கார
படிக்கட்டுகளும் இதற்கு இல்லை!


இன்பமாய் போகும்!
தோன்றினபடி போகும்!
இயற்கையோடு இயற்கையாய் எல்லா
இதயங்களையும் கொள்ளை கொள்ளும்!

இந்தப் புதுநதியின் தண்ணீரை
நீங்களும் கொஞ்சம் பருகிச் செல்லுங்கள்!

4 comments:

said...

உவமைகள் நன்றாக இருக்கின்றன. வித்தியாசமாகவும்.

said...

நல்ல கவிஞரின் பொன் வார்த்தைகள்.

கவிதையைப் படித்ததற்கு நன்றி தமிழ்நதி.

said...

நன்றாக உள்ளது !!!

அப்புறம், உங்கள் பெயரில் உள்ள "அத்தன்" என்ற சொல்லுக்கு என்ன பொருள்?

said...

கோவை மணி,

அத்தன் என்ற தமிழ்ச்சொல் மலையாளத்தில் அச்சன் என்ற சொல்லுக்கு இணையானது என்று சொல்லலாம். இந்த சொல் இப்போது நடைமுறையில் வெகுவாக உபயோகப் படுத்தப் படவில்லை என்றாலும், அதன் ஆழம் மிகுந்த அர்த்தம் வேறு எந்த சொல்லாலும் மாற்றம் செய்ய முடியாது.
அத்தன் என்றால் தெய்வம், பிதா, ஆசிரியன் என்று பலவிதமாகக் பொருள்படும்.