Monday, April 9, 2007

வேர்கள் நடத்தும் போர்கள்

("வார்ப்பு" சித்திரை 07 இதழில் வெளியான கவிதை)

சூழுகின்ற வெண்பனியையும்
தடவுகின்ற இளவெயிலையும்
தாங்கி நிற்கும் மரங்கள்
பச்சையிலைப் போர்வைகொண்டு...
வண்ண வண்ண மலர்கள்
சிரித்துச் சிரித்துக் கையசைத்து
வாசல் நின்று வரவேற்கும்
வசந்தகாலத்தை!

வண்ணம் தோய்ந்த இலைகள்
கம்பளமாய் விரிந்திருக்க
கோபமுற்ற சருகுகளின்
நள்ளிரவு சரசரப்பில்
மீதமுள்ள எலும்புக்கூடே
தொடை நடுங்கி நிற்கும்
இலையுதிர் காலத்தில்!

கால சுழற்சி நடத்தும்
கைப்பந்து போட்டியிலே
வசந்தமும், இலையுதிரும்
எதிரெதிரே விளையாட
பற்று கொண்டு நோக்கினால்
மறைந்து நிற்கும் உண்மை
புலவாமல் போகலாம்...

காலம் செய்த போதனையின்
கைகளிலே சிக்காமல்
முறுக்கி நிற்கும் வேர்கள்
மண்ணுக்கு அடியிலே
உண்மையின் சுவடாக...

கன்ன மேட்டில் குழிவிழ
மொட்டுக்கள் சிரிப்பதும்
சுருண்டிருக்கும் இளந்தளிர்கள்
கைவிரிக்கத் துடிப்பதும்
தீர்க்கமாய் வீற்றிருக்கும்
வேர்களை உறிஞ்சித்தான்...

பாறைகளைப் பிளப்பதும்
மலைகளைக் குடைவதும்
வெறும் மாலை நேரப்
பொழுதுபோக்காய் இருக்க
ஊடுருவல் ஒன்று
சத்தமில்லாமல் நடக்கும்
வலியில்லாத துளைகளால்
வருத்தமில்லை பாறைகளுக்கு...

திட்டங்கள் வகுத்தும்
பயனில்லை யென்று
சோர்வுற்று போயிருக்கும்
கவலை தோய்ந்த நெஞ்சங்களே!
மண்ணென்ற மூடி போட்டு
வெற்றியெனும் சூத்திரத்தை
வேர்கள் வடிவிலே பாருங்கள்...

வெளியோட்டத்தை விட்டு
சற்றே விலகி நின்றால்
புலப்படும் அந்த வேர்கள்
நெப்போலியன்
தலைவணங்கிய கடவுளாக!

0 comments: