Monday, May 25, 2009

கடவுள் எங்கே??


இமைகள் மூடிய
ஆழ நித்திரையில்
இதயத்தினுள்ளே எழும்பும்
குரல்களால் அரங்கேறும்
கனவுப் படலங்கள்.
இமைகள் பிரிந்தபோதும்
கனவுகள் பொசுங்கியபோதும்
கோபமேதும் வரவில்லை
காலைச் சூரியன்மேல்

சட்டைப்பையில் நிரம்பி
வழிந்த சிறுவெள்ளத்தை
கைகொண்டு பிதுக்கி
ஊசிப்போய் கிழிந்துபோன
பண முகப்பை
விசிறிக் காற்றில்
காயவைத்த போதும்
வெறுப்பேதும் வரவில்லை
கோடைக்கால இடிமழைமேல்

தூரதேசம் கடந்துபோய்
ஆண்டுகள் பலவோடி
நரைத்த தலையுடன்
உப்பிய முகத்துடன்
மறவாத நட்புகொண்ட
பள்ளி நண்பனோடு
பூங்கா தரையில்
சாவகாசமாய் கதைபேச
கால்சட்டையின் பின்புட்டத்தில்
ஒட்டிகொண்ட ஈரத்தால்
எதிர்ப்பேதும் வரவில்லை
பசேலென்ற புல்வெளிமேல்.

எதையெதையோ தேடித்தேடி
எங்கெங்கோ ஓடிப்போய்
அவலப்பட்டு நிற்கும்
வாழ்க்கையில் விஞ்சி
நிற்கும் அற்புதங்கள்
தெரிய வாய்ப்பில்லைதான்.
அதனாலே,
கத்தியை பையில்
வைத்துக் கொண்டு
கடவுளை பேசுபவர்
பின்னாலே கைகட்டி
நிற்கிறது மந்தைக் கூட்டம்.
பாதையெல்லாம் ரத்தம்
படிந்த பின்னும்
பயணத்தில் மாற்றமேதுமில்லை

தீர்க்கமாய் புரிந்தவன் மட்டும்
மெளனமாய் ரசிக்கின்றான்
அவலத்தினுள்ளேயும் அற்புதங்களை.

3 comments:

said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by the author.