Friday, May 29, 2009

ஒரு முடத்தென்னைமரத்தின் மௌன விசும்பல்கள்


கீழைக் காற்றில்
தலையசைத்து ஆடினேன்
எறிகுண்டு ஒன்று
என்மேல் விழும் வரை.

போராளிகளின் மண்ணில்
நானும் ஓர் போராளி என்று
எறிகுண்டு வீசி
என் கைகளை உடைத்தானோ?

என் நிழல்தனில்
கைவீசி விளையாடிய
குழந்தைகள் எங்கே?
கதை பேசி காலந்தள்ளிய
முதியவர் எங்கே?
வீரமுழக்கச் சபதங்கள் செய்த
வீரர்கள் எங்கே?
காற்றின் அதிர்வலையில்
நித்தம் உம் கானங்களை
கேட்டுத்தான் கரைகின்றன
என் தினங்கள்.

எனை வார்த்து
உம் உயிர் வளர்த்தேன்
என்ன கொடுமை?
இன்று
உமைத் தின்றல்லவோ
நான் வாழ்கின்றேன்.

உம் உடல் முழக்கங்ளை
வெடிகுண்டுகள் வெல்லலாம்.
நித்தம்
நான் கேட்கும்
உம்
ஆவி முழக்கங்களை
எப்படி எதிரி
நிறுத்தப் போகிறான்?

ஓநாய் சபையில்
நீதி கேட்டீர்
ஒரு
ஆட்டுக் குட்டியாய்.
அத்தனைக்கும் சாட்சியாய்
நின்று
வேதனைத் தீயில்
வெந்து சாகின்றேன்
என் முடிவில்லா
மௌனத்தை நினைத்து.

ஆயிரமாயிரம் உயிர்கொன்று
அசோகன் புத்தம் பற்ற
இன்று
அவன் தந்த
புத்தமல்லவோ ஆயிரமாயிரம்
உயிர் வாங்குகிறது.

நீதிகளைத் தின்று
அநீதிகளை கொன்று
கோடி வருடங்கள்
உடல் வளர்த்த
காலம்
உமக்கும் ஒரு பதில்
கொண்டிருக்கலாம்.

இங்கே நான் அநாதையாக
அங்கே நீ அநாதையாக
நாளை
நம் பிள்ளைகளாவது
கூடிக் குலாவும்
என்ற
பட்சிகளின் கதைப்பேச்சில்
இன்னும்
செத்துப் போய்விடவில்லை
என் நம்பிக்கை!

4 comments:

S.M.Pari said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by the author.
said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by the author.