ஆதலினால் காதல் செய்வீர்!

ஈரெட்டு வருடங்கள்
இனிதாய் போனபின்
இதயத்தின் கதவுகள்
மெதுவாய் தட்டப்பட
இயற்கையின் கையில்
நான் கண்டதோ
"காதல்" என்னும்
அழகிய திறவுகோல்.
"வெளியே போ"வென
துரத்தவும் திறனில்லை
"உள்ளே வா"வென
சொல்லவும் மனமில்லை
"யார் நீ?"
இதயம் வினவ,
"நான்தான் அன்பு"
மெலிதாய் ஒலித்தது.
"அனுப்பியது யார்?"
விடவில்லை இதயம்.
"கடவுள்" என்று
கருணையாய் சொல்ல,
பயமொன்று மறுத்தது
கழுத்தில் கைவைத்து
வெளியே தள்ள.
இறைவன் வரப்பிரசாதம்
இளமையின் அழகாய்.
ஈடொன்றும் இல்லை
இளநீரின் சுவைக்கு.
கூடித் தெரியுமது
வெயிலின் வேட்கையில்.
மல்லிகை நறுமணம்
இளம் மொட்டிலே.
வனப்படும் இவ்வுலகம்
காதல் இளநெஞ்சிலே.
சாதியில்லை பேதமில்லை
மொழியில்லை மதமுமில்லை
எல்லாருக்கும் "அவன்"
தந்த காதலுணர்வு
"பம்பர் பரிசாய்"!
அன்புக்கில்லை அடைக்குந்தாழ்
சரியாய் செப்பினான்
தமிழ் முனி!
ஆக,
பூட்டி வைக்காதே
இதயக் கதவுகளை.
தூர எறிந்துவிடாதே
இறைவனின் பரிசை.
ருசி அறிக
காதலின்!
கனிவு பிறக்கும்
கண்களில்!
கவிதை பொழியும்
சொற்களில்!
இசையமுது பாயும்
செவிகளில்!
காதல் வெல்ல
இதயம் வெல்லும்!
இதயம் வெல்ல
நேயம் வெல்லும்!
ஆதலினால்
காதல் செய்வீர்!!
3 comments:
:)
பீளமேடு பொண்ணுக எல்லாம் கண் முன்னே வராங்களாக்கும்...
தூயா,
வந்து புன்னகைச்சிட்டு போனதுக்கு நன்றி!
மங்கை,
தப்பா எடுத்துக்காதீங்க. ஏதோ ஒரு பீலிங்லே எழுதீட்டேன்.
Post a Comment