Sunday, November 11, 2012

பயணம்

அன்று...

மறுத்தேன்
இதயச் சுவர்களின்
ஈர
அகவல்களை...

பிரிந்தேன்
வளர்த்து சேர்த்த
பாச
உறவுகளை...

6 டன்
கனவுகளை
சுமந்த
என்
60 கிலோ
உடலுடன்...

பறந்தேன்
ஒரு
புரியாத உலகம்
நோக்கி...

இன்று ...

துளித் துளியாய்
உருமாறிப்
போயின என்
உறவுகளெல்லாம்...

மறைந்தன சில
மறந்தன சில
பிறந்தன சில
சேர்ந்தன சில

இதய வலிகளை
சன்ன சன்னமாய்
மழுங்கடித்த
அந்நிய நோட்டுகளும் ...

பழைய கனவுகளை
வேக வேகமாய்
கப்பலேற்றிய
புதிய பணங்களும் ...

கைநிறைய  இருந்தும்

பாழாய்ப்போன
இந்த
தேடல்  மட்டும்
இன்னும்
தொலையவில்லை...

சன்னலில்
பறந்துபோன
டிக்கெட்டாய்,
மறைந்துபோன
என்
போலியற்ற
அடையாளம்...

கனவுக் குமிழிக்குள்
மூர்ச்சையில்லாமல்
அடைந்து கிடக்கும்
என்
உண்மை முகவரி...

சூழ்நிலைச்
சங்கிலியென்னும்
கால்விலங்கு போட்டு
கைதியான  என்னை
கால அரசன்
கட்டி
இழுத்துச் செல்ல

போகும் பாதையில்
எங்கோ
கிடக்கும்
என்றொரு
குருட்டு
நம்பிக்கையோடு...

தள்ளாடி
பயணிக்கிறேன்
மெது மெதுவாய்!
எல்லை
இன்னும்
வெகு  தூரமில்லை,
ஆனாலும்...


1 comments:

said...
This comment has been removed by a blog administrator.