Friday, May 2, 2008

கனவுகள்

இவன் "மருத்துவன்"
என்று அப்பா
இவன் "விமானி"
என்று அம்மா
இவன் "விஞ்ஞானி"
என்று சுயமாய்
கட்டிக் கொண்ட
வீடுகள் எல்லாம்
ஏதோ ஒரு
வினோத அலையின்
விஷ வருடலில்
காணாமல் போக,
அப்பா கரையில்
ஒரு சில
அம்மா கரையில்
ஒரு சில
என் கரையில்
ஒரு சிலவென
மிஞ்சிப் போனதில்
தொனித்திருந்த
அந்த "நம்பிக்கை";
அதனால்,
கரைந்து போன
வீடுகளைப் பற்றி
சற்றும் கவலைப்படாமல்
சளைக்காமல் கட்டினோம்;
இதோ,
என் கரையில்
மொட்டு மொட்டாய்
பூத்திருக்கும் வீடுகள்;
இவை என்
பிள்ளையின் கனவுகள்;
துவண்டு வந்த
அலைகள் கொஞ்சமாய்
கரைத்தும் எஞ்சியிருக்கும்
வீடுகளின் மேல்
சொர்க்கமாய் பயணிக்கிறது
இந்த வாழ்க்கை!

0 comments: