Saturday, December 1, 2012

ஒரு மழையில் மனது

நீல தேவதை
முகம் கருத்தாள்
பூமியெங்கும்
மண்வாசனை!

முன்னிரவு நிசப்தம்
முழுதாய் கரைத்து
இமைகளை சாத்தி
இதயம் விழிக்கச்செய்த
தவளைகளின் அதறல்கள்.

தண்ணீரில் மிதக்கும்
காகித படகில்
சுமையாய் வீற்றிருக்கும்
குழந்தையின் மகிழ்ச்சி.

துள்ளித்தெறித்த
திவலைகளின் மோதலில்
உடைந்து பிறக்கும்
கண்ணாடிக் குமிழிகள் .

பச்சைமேனியில்
படர்ந்திருக்கும்
துளிகளில் ஒளிரும்
ஆயிரம் சூரியன்கள்.

தெருக்களின்  ஈரம்
என் இதயத்தில்
வரவில்லை
இன்னும்.

ஊரெங்கும் வெள்ளம்
வீடுகள் படகாக
படகுகள் வீடாக
குத்திட்ட கண்கள்
காத்திருந்தது
தொலைகாட்சியில்
அந்த ஒரு
செய்திக்கு மட்டும்.
"நாளை விடுமுறை"