Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Sunday, December 2, 2012

பார்வை வடு

உன்
கருவிழி அம்பு கொண்டு
என் இதயம் கிழித்தாய்,
உதிரம் காயமல்
உயிர் வாழ்கிறது
இன்னும்.

நீ மௌனம் கலைப்பாய்
என்று
நான் மௌனமாய் இருந்தேன்
நான் மௌனம் கலைப்பேன்
என்று
நீயும் மௌனம் கொண்டாயோ?

அர்த்தமற்று போனது
என் பேச்சுக்கள்
சில கணங்களில்.
என் நண்பர்களுக்கு தெரியாது
நீ கடந்து போகிறாய்
என்று.

என் உயிர் நண்பன் கூட
எதிரியாக போனான்
நீ அவனோடு
ஏதோ பேசிய போது.

சொல்லாமல்
மறைந்து போனாய்
ஒரு நாள்.
உன் காயத்தை மட்டும்
அப்படியே
என் நெஞ்சில்
 மறந்து விட்டுவிட்டு.

ஆண்டுகள் போயும்
வலியால் அவதிப்படுகிறேன்
அவ்வப் போது.
ஆனாலும்,
சுகமாய்த்தான்
இருக்கிறது.

அதனால்,
நன்றியோடு சொல்கிறேன்
நீ வேண்டாம்
நீ கொடுத்த
இந்த வலி போதும்
சாகும் வரைக்கும்!


Saturday, December 1, 2012

ஒரு மழையில் மனது

நீல தேவதை
முகம் கருத்தாள்
பூமியெங்கும்
மண்வாசனை!

முன்னிரவு நிசப்தம்
முழுதாய் கரைத்து
இமைகளை சாத்தி
இதயம் விழிக்கச்செய்த
தவளைகளின் அதறல்கள்.

தண்ணீரில் மிதக்கும்
காகித படகில்
சுமையாய் வீற்றிருக்கும்
குழந்தையின் மகிழ்ச்சி.

துள்ளித்தெறித்த
திவலைகளின் மோதலில்
உடைந்து பிறக்கும்
கண்ணாடிக் குமிழிகள் .

பச்சைமேனியில்
படர்ந்திருக்கும்
துளிகளில் ஒளிரும்
ஆயிரம் சூரியன்கள்.

தெருக்களின்  ஈரம்
என் இதயத்தில்
வரவில்லை
இன்னும்.

ஊரெங்கும் வெள்ளம்
வீடுகள் படகாக
படகுகள் வீடாக
குத்திட்ட கண்கள்
காத்திருந்தது
தொலைகாட்சியில்
அந்த ஒரு
செய்திக்கு மட்டும்.
"நாளை விடுமுறை"

Monday, November 19, 2012

மனைவி

மெழுகாய் 
உருகினாள் 
அவள்.
ஒளியில் 
திளைத்தது 
வீடு.


Sunday, November 11, 2012

பயணம்

அன்று...

மறுத்தேன்
இதயச் சுவர்களின்
ஈர
அகவல்களை...

பிரிந்தேன்
வளர்த்து சேர்த்த
பாச
உறவுகளை...

6 டன்
கனவுகளை
சுமந்த
என்
60 கிலோ
உடலுடன்...

பறந்தேன்
ஒரு
புரியாத உலகம்
நோக்கி...

இன்று ...

துளித் துளியாய்
உருமாறிப்
போயின என்
உறவுகளெல்லாம்...

மறைந்தன சில
மறந்தன சில
பிறந்தன சில
சேர்ந்தன சில

இதய வலிகளை
சன்ன சன்னமாய்
மழுங்கடித்த
அந்நிய நோட்டுகளும் ...

பழைய கனவுகளை
வேக வேகமாய்
கப்பலேற்றிய
புதிய பணங்களும் ...

கைநிறைய  இருந்தும்

பாழாய்ப்போன
இந்த
தேடல்  மட்டும்
இன்னும்
தொலையவில்லை...

சன்னலில்
பறந்துபோன
டிக்கெட்டாய்,
மறைந்துபோன
என்
போலியற்ற
அடையாளம்...

கனவுக் குமிழிக்குள்
மூர்ச்சையில்லாமல்
அடைந்து கிடக்கும்
என்
உண்மை முகவரி...

சூழ்நிலைச்
சங்கிலியென்னும்
கால்விலங்கு போட்டு
கைதியான  என்னை
கால அரசன்
கட்டி
இழுத்துச் செல்ல

போகும் பாதையில்
எங்கோ
கிடக்கும்
என்றொரு
குருட்டு
நம்பிக்கையோடு...

தள்ளாடி
பயணிக்கிறேன்
மெது மெதுவாய்!
எல்லை
இன்னும்
வெகு  தூரமில்லை,
ஆனாலும்...


Wednesday, January 6, 2010

நீ வருவாயென


ஒரே பக்கத்தை பத்து முறை
புரட்டிவிட்டேன்
நீ எங்கு இருக்கிறாய்?

நடக்கும் பாதையை
பார்த்து சலித்துவிட்டேன்
பரவியிருந்த நறுமணக்
கவழல் மரித்து நாளாகிவிட்டது

ஊர் கதைகள் மென்றபடி
தலை விலக்கி நோக்கினால்
மெதுவாய்ப் பயணிக்கிறார்கள்
உன் தோழிகள்

மிதிவண்டி
இப்படியும் அப்படியும்
செல்கிறது
உன் தங்கை
அனாசயமாக ஓட்டுகிறாள்

ஒரு வலிக்கு மருந்து
இன்னொரு காயம்
என்று சொல்கிறார்கள்
நீ இருந்ததைவிட
இப்போது அதிகமாய்
வலிக்கிறது என்று
தெரியாமல்.

பொறுமையாய் காத்திருக்கிறேன்
ஒரு குறிஞ்சிப் பூவைப்போல.
ஏனெனில்
நிஜசாயம் பூசப்பட்ட
பொய் பொம்மைகள்
வெளிறிவிடும் ஒருநாள்
என்ற நம்பிக்கையில்.

கிறுக்கன் என்று
கைசுட்டுவதில்லை
யாரும் இப்போதெல்லாம்!

Wednesday, June 3, 2009

புகைத்தலின் பெண்மை


அன்று
தொலை நிலவாய்
தூர நின்று சிரித்தாய்
பின்
கொளுத்தெரிந்த என்
காம இச்சைக்கு
பலியானாய்

இன்று
நாளற உனை
பத்துமுறையாவது
முத்தமிடுகிறேன்
சில நேரம்
என் சொந்தக்
காதலி
முன்னாலே
இருந்தாலும்
போதவில்லை

மறந்துவிட அவள்
இறைஞ்சியும், அழுதும்
மறுத்துவிட்டேன்
தீர்க்கமாய்
உனை மறக்க

அடுத்தவனுக்கில்லை
என்னின்பம் என்று
அனுபவித்தபின்
அநியாயமாய்
எரித்து
மீதமுள்ள
குற்றுயிரையும்
காலால் பறிக்கிறேன்

ஒரு தூக்கு தண்டனை
தியாகி போல
நீயும்
மெளனமாய்
ஏற்றுக் கொள்கிறாய்

இருந்தும் என்ன?
கடவுளுக்கா உன்னை
காணிக்கை
செய்யப் போகிறார்கள்
இந்த மானுட
ஜென்மங்கள்

அமைதியான
வீட்டுக்குள்
இன்று நடந்த
அந்த அரங்கேற்றம்

கண்மூடிய
தங்கை
கலைந்து போன
அனுபவிப்பில்
நான்
அரைகுறையாய்
ஆதரவேதுமற்று

இனி அம்மா
அப்புறம் அப்பா
ஒவ்வொருவராய்
உன்னை
முழுகச் சொல்வார்கள்
முடிந்தால்
கண்ணீர் விட்டு
கதறுவார்கள்

தெரியட்டும் அவர்களுக்கும்
நம் காதலின் ஆழம்
என்னவென்று.
பின்
விட்டுவிடுவேன்
இந்த
திருட்டு அங்கீகாரத்தை
ஆனால்
உன்னை மட்டுமல்ல!

Sunday, May 31, 2009

இசைஞானிக்கு என் சமர்ப்பணம்


ஆள் அரவமில்லாத
அடர்ந்த காட்டுக்குள்ளே
திக்குத் தெரியாமல்
அலையும் ஊதக்காற்றிற்கு
உன் புல்லாங்குழல்தானே
முகவரி தந்தது.

தப்பை மூங்கிலுக்குள்ளே
காற்றின் நர்த்தனம்.
உருவெடுத்த இசைக்கு
உயிர் கொடுத்தது
நீயா? நானா? என்ற
அறியாமைச் சண்டைவேறு
நீயில்லாத நேரத்தில்!

முறுக்கேறிய கம்பியிழைகள்
இளமை ததும்பும்
புதுக்காதலி போல
மரப் பேழையோடு
வெட்கம்விட்டு
கொஞ்சி குலாவ
உருவான பாட்டுகளில்
சொக்குகின்ற காதல்ரசங்கள்!

உன் தாலாட்டுகளில்
உறங்கிப்போன குழந்தகளெல்லாம்
இன்று
தத்தம் குழந்தைகளை
உறங்க வைக்க
அதே தாலாட்டை
தேடி அலையும்
ரகசியம் சொல்வாயோ?

சோகம் சுமந்து
சாகும் மனிதனெல்லாம்
உன் கீதங்களை
கேட்டு
மனக் கவலைகளை
தூர வீசிவிட்டு
சிரித்துக் கொண்டுதானே
சாகின்றான்.

அன்றாடங் காய்ச்சிக்கு
பாதி வயிறு
நிரம்பிய நாட்களிலே
உன் பாட்டுத்தானே
மீதி வயிற்றை
நிரப்பும்.

உருகாத மெழுகாய்
நின்ற
கர்நாடக ராகங்கள்
உன் இசையொளி
முன்னால் உருகிப்போக
அதனால்
ஒளி பெற்றதென்னவோ
எம்
தமிழ்நாட்டு கிராமங்கள்தான்.

உன் ஓராயிரம்
பாட்டுகளை ஓயாமல்
ஒலித்து மகிழ்ந்த
ஒலிப் பேழைகளெல்லாம்
தன் வாய்வலித்து
மறந்ததைக் கூட
எவரிடமும் சொல்வதில்லை!

சிம்பொனித் தமிழனே!

எங்கள் பயணங்கள்
எங்கே முடியுமோ
அதுவரை
கொண்டு செல்லும்
எங்கள் இதயத்தோடு
ஒட்டிப் போன
உன் அதிர்வலைகள்!