Sunday, March 23, 2008

இன்னொரு பாரதி தேவையில்லை!

வைகறைப் பொழுதில்
நித்திரைத்திருக்கும் மலைமேல்
இறுக்கமாய் படர்ந்திருக்கும்
வெண்பனியின் மூட்டத்தினூடே
வெள்ளி நீர்வீழ்ச்சியாய்
கொட்டித் தீர்த்த
தெய்வீக மழலையின்
மாசில்லா வாய்மொழியென்ற
"பிள்ளைத்தமிழும்"
மறைந்து போய்,

பூத்துக் குலுங்கும்
பூங்காவினூடே கவிழும்
செண்பக நறுமணத்தில்
லயித்து மயக்கமுற்ற
மனம் போல்
கொஞ்சிய காதலியின்
கற்கண்டுத் தமிழை
சுவைத்து சுவைத்துக்
காதலில் தன்னைத்
தொலைத்து விட்ட
"அகநானூற்றுக் காதலர்"களும்
காணாமல் போய்,

சொட்டு விஷமாய்
உயிரீறும் வாளாய்
செந்தமிழுக்குள்ளே நையக்
கலந்து போய்விட்ட
ஆங்கிலச் சொற்கள்.
கூடுகிறது குப்பை
நாறுகிறது தமிழ்வீதி
அவரவர் வீட்டுக்
குப்பைகளை அவரவர்
கையால் வழித்தெறிய
இன்னொரு பாரதி தேவையோ?