இயற்கை அன்பு - குறுங்கவிதை
அந்தி மாலையும் அழகுப் பூக்களும்
சிந்து துளிகளும் சீறும் மின்னலும்
வந்து ரசிக்க வளமான மலைகளும்
தந்து பிரமிப்பது இயற்கையன்பே!
இரமேஷ் பீளமேடு-வின் சிந்தனைச் சாலை
அந்தி மாலையும் அழகுப் பூக்களும்
சிந்து துளிகளும் சீறும் மின்னலும்
வந்து ரசிக்க வளமான மலைகளும்
தந்து பிரமிப்பது இயற்கையன்பே!
Posted by
யாழினி அத்தன்
at
9:11 AM
0
comments
-----------------------------
மரணவலி கொடுத்த
மட்டற்ற மகிழ்ச்சி
"அம்மா" அந்தஸ்து;
------------------------------
இருட்டு அறைக்குள்
கண்மூடிய நர்த்தனம்
கருவறையில் குழந்தை;
------------------------------
சிசுவின் அலுப்பில்
ஒவ்வொரு உதையிலும்
பெருமையின் வெளிப்பாடு;
------------------------------
எண்ணைக் குளியல்
வெந்நீரின் கதகதப்பில்
அம்மாவின் அன்பு;
-----------------------------
வெண்ணிலவின் ஆக்கிரமிப்பில்
நிரம்பிப் போயிருக்கும்
குழந்தையின் வயிறு;
-----------------------------
ஒற்றை மொழியில்
சர்வதேச சமத்துவம்
குழந்தையின் அழுகை;
-----------------------------
தொலைக்காட்சியில் கிரிக்கெட்
வீரர் எடுக்கும் சதம்
ஓடியாடும் அம்மா;
-----------------------------
அயல்நாட்டு வேலை
டாலரில் சம்பளம்
அம்மா விழியோரம் கண்ணீர்;
-----------------------------
அம்மாவைத் திட்டியவள்
தண்டனை பெறுகிறாள்
மாமியாராக;
-----------------------------
நதி மூலத்திற்கு
திரும்பாத நதி
அம்மா கருவறை;
------------------------------
Posted by
யாழினி அத்தன்
at
6:55 PM
14
comments
("வார்ப்பு" சித்திரை 07 இதழில் வெளியான கவிதை)
சூழுகின்ற வெண்பனியையும்
தடவுகின்ற இளவெயிலையும்
தாங்கி நிற்கும் மரங்கள்
பச்சையிலைப் போர்வைகொண்டு...
வண்ண வண்ண மலர்கள்
சிரித்துச் சிரித்துக் கையசைத்து
வாசல் நின்று வரவேற்கும்
வசந்தகாலத்தை!
வண்ணம் தோய்ந்த இலைகள்
கம்பளமாய் விரிந்திருக்க
கோபமுற்ற சருகுகளின்
நள்ளிரவு சரசரப்பில்
மீதமுள்ள எலும்புக்கூடே
தொடை நடுங்கி நிற்கும்
இலையுதிர் காலத்தில்!
கால சுழற்சி நடத்தும்
கைப்பந்து போட்டியிலே
வசந்தமும், இலையுதிரும்
எதிரெதிரே விளையாட
பற்று கொண்டு நோக்கினால்
மறைந்து நிற்கும் உண்மை
புலவாமல் போகலாம்...
காலம் செய்த போதனையின்
கைகளிலே சிக்காமல்
முறுக்கி நிற்கும் வேர்கள்
மண்ணுக்கு அடியிலே
உண்மையின் சுவடாக...
கன்ன மேட்டில் குழிவிழ
மொட்டுக்கள் சிரிப்பதும்
சுருண்டிருக்கும் இளந்தளிர்கள்
கைவிரிக்கத் துடிப்பதும்
தீர்க்கமாய் வீற்றிருக்கும்
வேர்களை உறிஞ்சித்தான்...
பாறைகளைப் பிளப்பதும்
மலைகளைக் குடைவதும்
வெறும் மாலை நேரப்
பொழுதுபோக்காய் இருக்க
ஊடுருவல் ஒன்று
சத்தமில்லாமல் நடக்கும்
வலியில்லாத துளைகளால்
வருத்தமில்லை பாறைகளுக்கு...
திட்டங்கள் வகுத்தும்
பயனில்லை யென்று
சோர்வுற்று போயிருக்கும்
கவலை தோய்ந்த நெஞ்சங்களே!
மண்ணென்ற மூடி போட்டு
வெற்றியெனும் சூத்திரத்தை
வேர்கள் வடிவிலே பாருங்கள்...
வெளியோட்டத்தை விட்டு
சற்றே விலகி நின்றால்
புலப்படும் அந்த வேர்கள்
நெப்போலியன்
தலைவணங்கிய கடவுளாக!
Posted by
யாழினி அத்தன்
at
7:50 AM
0
comments
காற்றில் வடிவங்களற்ற
சிகரெட் புகையாய்
கரைந்து போன
நிர்வாண மனமொன்று
வெளித்தோலின் நிறமதை
உதாசீனப் படுத்தியது
ஈட்டிக் கண்களும்
அம்பு விரல்களும்
குத்திக் கிழிக்காதவரை...
கேட்காமல் கிடைத்த
வரமாய் பார்த்தாள்
தாய் குழந்தையை.
சாபமாய் கிடைத்த
நிறமென்று பார்த்தது
அறிந்துணரா உலகம்...
வெள்ளைப்பால் தொட்ட
கறுப்புக் கடவுள்
சிந்தனைகள் இல்லை...
பூச்சியின் இறக்கையில்
கலந்த வண்ணங்கள்
விலக்கல்கள் இல்லை...
வெள்ளைப் படலத்தில்
கருவிழியின் மிதப்பு
வெறுப்புகள் இல்லை...
கருநீல வானத்துள்
வெண்ணிலாவின் பவனி
மறுப்புகள் இல்லை...
இல்லாதவற்றிக்கு எல்லாம்
சமுதாயம் வைத்ததொரு
அழுத்தமான முற்றுப்புள்ளி...
வானவெற்றிடத்தின் நிறம்?
வெள்ளை ஒளிக்கற்றையில்
விளிம்பு விளைவு?
கதிரவன் விடை
தெரியாமல் கண்விழிக்க
நிறம்பிரிக்கும் பட்டகமாய்
இமை இமைத்தது
ஒன்றுமில்லா சூழ்வெளி.
சாதியென்றும் மதமென்றும்
இனமென்றும் நிறமென்றும்
சமுதாயத்தை நிறம்நிறமாய்
கூறாக்கியது முப்பட்டகமான
ஒன்றுமில்லா மனமோ?
Posted by
யாழினி அத்தன்
at
10:18 AM
0
comments
தேசிய மகாத்மாக்கள்
சிரித்தபடி சிறை வைக்கப்பட்டார்கள்
காகிதங்களில்;
ரூபாயாக
டாலராக
ரூபிளாக
அந்தந்த நாட்டுத்
திறந்தவெளி
காகிதச் சிறைகளில்;
பணங்களின்
முகப்பில் பவனி
வருகிறார்கள்
மனித மனங்களில்
மறந்துவிட்டபடியால்;
மெலிதாய் உதிர்க்கிறார்கள்
புன்னகையை
செல்வந்தன் பெட்டியில்
சிறைப்பட்ட சோகமா
ஏழையின் வயிற்றை
நிரப்பிய மகிழ்ச்சியா
என்று புரிந்து
கொள்ள முடியாதபடி;
அவர் புன்னகை
ஏழையின் கைகளில்
ஜொலிக்க
அவன் ஒளிர்விடும்
சிரிப்பில் தெரியும்
இறைவன் இருப்பு;
கைவிட்டு கைமாறி
கசங்கி கிழிந்து
வாடிப் போயிருந்தும்
வாடாமல் மனிதர்களை
வாழ செய்து
மறைந்தும் மறக்காத
அவர் தியாகங்கள்;
கொள்கைக்கு எதிராய்
துவேஷக் கொடிகள்
பிடித்த பகைவர்
விரல்கள் ஐந்தும்
இப்போது தடவி
மகிழ்கின்றன
அவர் முகப்பை;
"மகாத்மாக்கள் மறைவதில்லை"
பொதிந்து கிடக்கும்
உண்மைகள்
குலுங்கிச் சிரிக்கின்றன
எங்கோ பதுங்கி நின்று;
Posted by
யாழினி அத்தன்
at
9:42 AM
2
comments
மலைமீது பொழிந்த மழையால்
உருவெடுத்த காட்டாற்று வெள்ளமாக
மனதில் பெருக்கெடுக்கும் கற்பனைகள்!
சிந்தனை அணை நிரம்ப நிரம்ப
திறக்க பொறுத்திருக்கும் மதகுகளாக
விரல்கள் பிடித்திருக்கும் எழுதுகோல்!
விடுபட்ட தண்ணீரை
கொண்டு செல்லும் வடிகாலாக
எழுத்தாணி குத்திய வலிகளை
சத்தமிடாமல் தாங்கிக்கொள்ளும் காகிதம்!
சுழன்று, வளைந்து, ஆடித் தவழ்ந்து
அழகாய்ச் சென்று ஆறாய்
பிறப்பெடுக்கும் ஒரு "புதுக் கவிதை"!
இலக்கணம் என்ற சிமெண்ட்
கரைகள் இதற்கு இல்லை!
எதுகை, மோனை என்ற அலங்கார
படிக்கட்டுகளும் இதற்கு இல்லை!
இன்பமாய் போகும்!
தோன்றினபடி போகும்!
இயற்கையோடு இயற்கையாய் எல்லா
இதயங்களையும் கொள்ளை கொள்ளும்!
இந்தப் புதுநதியின் தண்ணீரை
நீங்களும் கொஞ்சம் பருகிச் செல்லுங்கள்!
Posted by
யாழினி அத்தன்
at
12:03 PM
4
comments
("திண்ணை" யில் மார்ச் 29, 2007ல் வெளிவந்த கவிதை)
ஆதவன் கண்ணயர்வில்
படரத் துடிக்கும்
மாலைப் பொழுது.
பறவைகளின் கீச்சுக்கள்
ஓய்ந்தப் பின்
சிறகைவிரிக்கும் இரவுகள்.
கனவுக் கொட்டகையின்
மெல்ல மேலே
உயரும் தங்கத்திரை.
திரையில் தோன்றும்
நாயகனாக நான்
காசேதும் வாங்காமல்.
சொந்த நடிப்பை
மனதார ரசிப்பேன்
காசேதும் கொடுக்காமல்.
நாட்டியம் ஆடும்
நடன மங்கையாக
கண்மூடிய கருவிழிகள்.
பாட்டுப் பாடும்
குயில் பாடகியாக
இறுக்கமான உதடுகள்.
பகல்கள் சேர்த்த
நிராசைகள் அரங்கேறும்
இன்பமாய் இரவினிலே.
உதறிய காதலியோடு
காவியம் பாடலாம்
ஒன்றாகக் கைகோர்த்து.
சண்டையிட்ட எதிரியோடு
இலக்கியம் பேசலாம்
சாவகாசமாக மரத்தடியில்.
பிறக்காத குழந்தையோடு
மணல்வீடு கட்டி
இடிக்கலாம் கடற்கரையில்.
சுருள்சுருளான தொடரினூடே
இடைவேளை போடவரும்
காலைக் கதிரவன்.
தூக்கம் கலைந்தபின்
ஏங்கித் தவிப்பேன்
நிசமில்லாத நிழலுக்காக.
இல்லையேல்,
நிராசை மூட்டையை
நெஞ்சினிலே தூக்கிச்
சுமக்க வலுவேது?
Posted by
யாழினி அத்தன்
at
7:46 AM
3
comments