Sunday, December 2, 2012

பார்வை வடு

உன்
கருவிழி அம்பு கொண்டு
என் இதயம் கிழித்தாய்,
உதிரம் காயமல்
உயிர் வாழ்கிறது
இன்னும்.

நீ மௌனம் கலைப்பாய்
என்று
நான் மௌனமாய் இருந்தேன்
நான் மௌனம் கலைப்பேன்
என்று
நீயும் மௌனம் கொண்டாயோ?

அர்த்தமற்று போனது
என் பேச்சுக்கள்
சில கணங்களில்.
என் நண்பர்களுக்கு தெரியாது
நீ கடந்து போகிறாய்
என்று.

என் உயிர் நண்பன் கூட
எதிரியாக போனான்
நீ அவனோடு
ஏதோ பேசிய போது.

சொல்லாமல்
மறைந்து போனாய்
ஒரு நாள்.
உன் காயத்தை மட்டும்
அப்படியே
என் நெஞ்சில்
 மறந்து விட்டுவிட்டு.

ஆண்டுகள் போயும்
வலியால் அவதிப்படுகிறேன்
அவ்வப் போது.
ஆனாலும்,
சுகமாய்த்தான்
இருக்கிறது.

அதனால்,
நன்றியோடு சொல்கிறேன்
நீ வேண்டாம்
நீ கொடுத்த
இந்த வலி போதும்
சாகும் வரைக்கும்!


Saturday, December 1, 2012

ஒரு மழையில் மனது

நீல தேவதை
முகம் கருத்தாள்
பூமியெங்கும்
மண்வாசனை!

முன்னிரவு நிசப்தம்
முழுதாய் கரைத்து
இமைகளை சாத்தி
இதயம் விழிக்கச்செய்த
தவளைகளின் அதறல்கள்.

தண்ணீரில் மிதக்கும்
காகித படகில்
சுமையாய் வீற்றிருக்கும்
குழந்தையின் மகிழ்ச்சி.

துள்ளித்தெறித்த
திவலைகளின் மோதலில்
உடைந்து பிறக்கும்
கண்ணாடிக் குமிழிகள் .

பச்சைமேனியில்
படர்ந்திருக்கும்
துளிகளில் ஒளிரும்
ஆயிரம் சூரியன்கள்.

தெருக்களின்  ஈரம்
என் இதயத்தில்
வரவில்லை
இன்னும்.

ஊரெங்கும் வெள்ளம்
வீடுகள் படகாக
படகுகள் வீடாக
குத்திட்ட கண்கள்
காத்திருந்தது
தொலைகாட்சியில்
அந்த ஒரு
செய்திக்கு மட்டும்.
"நாளை விடுமுறை"